பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், மேலதிக வகுப்புக்குச் சென்று வீடுதிரும்பவில்லை என பதுளை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயாரால், நேற்று (20) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரம் 12இல் கல்வி கற்கும் 17 வயதான மாணவியே, காணாமல் போயுள்ளார். பதுளை மாநகரில் இடம்பெறும் மேலதிக வகுப்பொன்றுக்கு, நேற்று முன்தினம் (19) சென்ற குறித்த மாணவி, வீடு திரும்பவில்லையென்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை – கலன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மாணவி, மேலதிக வகுப்புக்கு எடுத்து வந்ததாகக் கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியவை பதுளை – கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தோட்ட இளைஞர்கள் குழுவொன்று, மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
காணாமல் போன மாணவி, நீர் நிலையில் விழுந்திருக்க கூடுமென என்ற சந்தேகம் எழுப்பட்டிருப்பதால், மாணவியின் தாயாரும் உறவினர்களும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் செய்த புகாரையடுத்து, தேடுதல்களை உடன் மேற்கொள்ளுமாறு, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவசர கடிதமொன்றினை எம்.பி அனுப்பியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நேரடியாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பதுளை பொலிஸ்சார் சுழியோடிகள் சகிதம் குறிப்பிட்ட நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.