பஞ்சாப் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்து 50 வயது வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மச்சிவாரா நகராட்சி முன்னாள் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றவர். மேலும் இவர் விடுமுறையில் லூதியானாவுக்கு வந்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், பணத்தையும் ஏமாற்றியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஆர்யா மொஹல்லாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு வயது 55. குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே மது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும், 2012 ஆம் ஆண்டு விடுமுறைக்காக லூதியானாவுக்கு வந்திருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொண்டதாகவும் அந்த பெண் கூறினார்.
அவர் இந்தியாவில் உள்ள தனது நண்பர்களுக்காக பிறந்தநாள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர் விருந்தினர்களில் ஒருவருடன் வந்திருந்தார். அங்கு அவர் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார்.
2012 டிசம்பரில், தல்ஜித் சிங் லூதியானாவின் தந்த்ராவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடன் உடல் ரீதியிலான உறவில் அவர் ஈடுபட்டதாக பெண் கூறினார். பின்னர்தான், தல்ஜித் சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது தனக்கு தெரியவந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் குர்மீத் சிங், அந்த பெண் 2022 அக்டோபர் 18 அன்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) புகார் அளித்ததாக கூறினார். ஐந்து மாதங்களாக இந்த விஷயத்தை விசாரித்த பிறகு, சதர் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை ஐபிசி 376 பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தது.