பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் ஏற்கெனவே ஒரு தடவை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இன்று தடுப்பூசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 மத்திய நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதுடன், 44,491 உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கூறியுள்ளார்..
கொழும்பு மாவட்டத்திலுள்ள 04 வலயங்களுக்குட்பட்ட மாணவர்களுக்கே இன்று(15) தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. அதற்கமைய, விசாகா வித்தியாலயம், தேர்ஸ்டன் கல்லூரி, கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ட் கல்லூரி, மற்றும் கொட்டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதுடன், அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் தேசிய அடையாள அட்டையை தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.