மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற சென்று காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று (20) இவ்வாறு சடலமாக கரையொதுங்கினார்.
கடந்த திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிங்கிரிய பகுதியிலிருந்து மாரவில பிரதேசத்துக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்த சிலர், மாரவில முதுகட்டுவ பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி திடீரென காணாமல் போனதையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் கூக்குரலிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு நின்றவர்கள் கடலுக்குள் சென்று குறித்த சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தின் பின்னர் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
எனினும், சிறுவனை மீட்பதற்காகச் சென்றவர்களில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இவரை கடந்த இரு நாட்களாக தேடி வந்த நிலையில், அவர் இன்று சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.