ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ரன் இலக்காக இருந்தது.
இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பெங்களூர் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் பட்டேல் 26 விக்கெட்டை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்ஷல் பட்டேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதை ஹர்ஷல் பட்டேல் முறியடித்தார்.
ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரராக பிராவோ உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 2013 ஐ.பி.எல்.லில் 32 விக்கெட் கைப்பற்றினார். அவரது சாதனையை நோக்கி ஹர்ஷல் பட்டேல் செல்கிறார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.