2019 ஆம் ஆண்டில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரையில் அதன் பரவலை தொடர்கிறது. ஒரு சில வைரஸ் வகைகள் மட்டுமே மனிதர்களின் உடலில் பரவி மரபு திரிபு ஏற்பட கூடியவை. அந்த வகையில் கொரோனா வைரஸும் மரபு திரிபு பண்புகளை கொண்டது.
முதன்முதலில் பரவ தொடங்கிய கொரோனா வகையை விடவும் அதன் பிறகு மரபு திரிபு பெற்ற டெல்டா வகை கொரோனா மிகவும் ஆபத்தானதாக தற்போது வரை இருந்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை எல்லா தரப்பு மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவினால், இரண்டு உயிர்களையும் பாதிக்க கூடும்.
இப்படியொரு மோசமான நிலை பல கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொரோனாவால் உருவாகி உள்ளது. அந்த வகையில் லாரா வார்ட் என்கிற இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இவருக்கு கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி டெலிவரி திகதியாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
முன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த லாராவுக்கு சம்மர் விடுமுறையில் லேசான சளி இருந்துள்ளது. அது கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் அப்போது அவர் பிசிஆர் பரிசோதனை எடுத்துள்ளார்.
அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அந்த நேரத்தில் லாரா கர்ப்பமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சரி என்று அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள், மிக சீக்கிரத்திலே லாராவுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே அவசர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார்.
லாரா கர்ப்பமாக இருந்ததால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. மேலும் கொரோனா வைரஸால் பெருமளவு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு லாரா சென்றுவிட்டார். இதை அறிந்த மருத்தவர்கள் உடனடியாக குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியில் எடுத்தாக வேண்டும் என்று எண்ணினர்.
கொரோனாவின் வீரியம் அப்போது உலக அளவில் அதிகம் இருந்ததால் லாராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் அறுவை சிகிச்சை அறைக்குள் அனுமதிக்கவில்லை. ராயல் போல்டான் மருத்துவமனையில் லாராவுக்கு வெற்றிகரமாக டெலிவரியானது.
அதுவும் சிசேரியன் முறையில் குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. சுமார் 7 வாரங்கள் கொரோனாவின் பாதிப்பால் கோமாவில் இருந்த லாரா செப்டம்பர் 30 ஆம் திகதி அன்று நினைவு திரும்பினார்.
அவர் முதன்முதலில் கண் விழித்து பார்த்தது அவரின் பெண் குழந்தையை தான். பல நாட்களாக கோமாவில் இருந்ததால் லாரா தனது உடலை அசைக்க முடியாத நிலையில் இருந்தார்.
நம்பிக்கை அற்ற சூழலில் மிகப்பெரிய நம்பிக்கையாக இந்த பெண் குழந்தை பிறந்துள்ளதால் இதற்கு ‘ஹோப்’ (Hope) என்று பெயர் வைத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.