தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் பெண்களின் குளியலறையில் கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் உள்ள பெண்களின் குளியலறையில் இருந்துதான் பல ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத்துறை இதனை உறுதிபடுத்தியுள்ளது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை தாய்லாந்து போலீஸ் கைது செய்துள்ளதையும் வெளிவிவகார துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ தூதரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் நலன் மற்றும் தனியுரிமைக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து தகுந்த ஆதரவை வழங்குகிறோம்” என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் தற்போதைய சட்ட விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். பெண்களின் குளியலறையில் கேமரா இருந்தது தொடர்பாக ஆஸ்திரேலிய தூதரகம் ஒரு நபருக்கு எதிராக ஜனவரி 6-ம் தேதி புகார் அளித்ததாக தாய்லாந்து போலீஸ் உயர் அதிகாரி கெமரின் ஹசிரி தெரிவித்தார்.
தூதரகத்தில் பெண்களின் குளியலறையில் கேமராக்கள் எவ்வளவு நேரம் இருந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை, கடந்த ஆண்டு இறுதியில் குளியலறையின் தரையில் கேமரா SD கார்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், அங்கு கேமராக்கள் இருந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததாக ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனமான ABC அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஒரு தீவிர பாதுகாப்பு மீறலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஒருவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் தூதரகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற சாதனம் பொருத்தும் அளவுக்கு பாதுகாப்பு குறைவாக இருந்தால் அங்கு போதிய அளவு பாதுகாப்பு இல்லை என்பதனை காட்டுவதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹக் வைட் கூறினார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.