சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந்தேதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பதவி விலகும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
கூட்டணி ஆட்சியை அமைக்க அவரது கட்சிக்கு வழங்கிய ஆதரவை கிரீன்ஸ் கட்சி திடீரென திரும்பப்பெற்றது.
அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுறைப்படி கூட்டணிக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். எனவேதான் பிரதமர் மெக்தலினா பதவி விலகினார்.
இந்த நிலையில் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் பெருவாரியான எம்.பி.க்கள் மெக்தலினாவை பிரதமராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதை தொடர்ந்து அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூட்டணி கட்சியின் ஆதரவு இன்றி சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பார் என்று தெரிகிறது. அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.