உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது.
இந்த தருணத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ்நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8ஆம் திகதி மரணம் அடைந்தார்.
அதில் இருந்து அவர் கூறியதாக ஒரு மேற்கோளை டுவிட்டர் உபயோகிப்பாளர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த மேற்கோள், “ உங்களில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ் தடுப்பூசி) போட்டுக்கொண்டவர்கள், எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். பிறகு உங்கள் அரசாங்கத்தின்மீது வழக்கு போடுங்கள்” என்பதாக அமைந்துள்ளது.
இதுபெரும் பரபரப்பை உலகளவில் ஏற்படுத்தி இருக்கிறது.
இது உண்மைதானா, நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? இதோ ஒரு பார்வை:-
உபசனா ரே (விஞ்ஞானி, கொல்கத்தா சி.எஸ்.ஐ.ஆர். இந்திய ரசாயன உயிரியல் கழகம்):-
ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, எதற்காக எச்.ஐ.வி. சோதனைக்கு வழிவகுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆதாரம் இல்லாத தவறான தகவல்களை நாம் சுமந்து செல்லக்கூடாது.
வினீதா பால் (புனே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி கழகம்):-
கொரோனா தடுப்பூசிகள் எந்த விதத்திலும் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது. மாண்டாக்னியர் அப்படி சொல்லி இருக்கிறாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.
தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு தடுப்பை உண்டுபண்ணுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்கிற தனி நபர்கள் பாசிட்டிவ் ஆகலாம். இது தடுப்பூசி பூஸ்டர் டோசால் நேர்ந்ததை விட தற்செயலாக இருக்கலாம்.
நாகசுரேஷ் வீராப்பு (ஷிவ்நாடார் பல்கலைக்கழகம், டெல்லி):-
கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் எச்.ஐ.வி. வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது.
என்ன, தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கு, கொரோனா தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் ரத்த எச்.ஐ.வி. ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடிகளுக்கான சிறிய மருத்துவ பரிசோதனையை அரசு நிறுவனங்கள் நடத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி – மாலைமலர்
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.