இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில், நேற்றுக்காலை 11.05 க்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அத்துடன், பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார செயலாளர் மற்றும் படைகளின் தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பிராந்தியத்தில் மிகவும் பாரிய இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றான மித்ர சக்தி பயிற்சியையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கஜபா தின கொண்டாட்டங்களிலும் அவர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள அவர் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலுமான பகிரப்பட்ட ஆழமான ஒத்துழைப்பு மற்றும் வலுவான உறவுகள் ஆகியவற்றை இந்த விஜயம் பிரதிபலிக்கின்றது.
இந்தியாவின் முன்னுரிமைக்குரிய பங்காளராக இலங்கை காணப்படும் சூழலில் பரஸ்பர நலன்கள் மற்றும் ஏற்கெனவே காணப்படும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மார்க்கங்கள் தொடர்பாக இந்த விஜயத்தின்போது ஆராயப்படும்.
இந்த கலந்துரையாடல்கள் அனைத்தும் கொவிட்-19 வழிமுறைகளை மிகவும் இறுக்கமாக பின்பற்றியவாறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.