பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதால், குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், தற்போது போதியளவு நீர் இருப்பு உள்ளதாகவும் நீர் வெட்டு அபாயம் இல்லை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர் மின் உற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, 120 அடி உயரமான மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 80.9 அடியாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், 155 அடி உயரமான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 134 அடியாக குறைவடைந்துள்ளது.
மேலும், 82 அடி உயரமான லக்ஸ்பான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 75.2 அடி குறைவடைந்துள்ளதுடன், 91 அடி உயரமான விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீரமட்டம் 86.8 அடியாக குறைவடைந்துள்ளது.
55 அடி உயரமான கெனியன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 49.1 அடியாக குறைவடைந்துள்ள நிலையில், கெனியோன் நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி, சில மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.