கொரோனா பரவல் தீவிரமடைந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்று வினவியதற்கு மேலும் தெரிவித்த அவர்,
கடந்த டிசெம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாங்கள் பெரிய பாடங்களைக் கற்றுக்கொண்டோம் என்றும், தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, கடுமையான விதிமுறைகளை விதிக்கலாமா அல்லது முடக்கத்துக்குச் செல்லலாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த ஆண்டின் இறுதியில், குறிப்பாக பண்டிகை காலங்களைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் முடகத்தை அறிவித்தால் ஆச்சரியமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
ஏனென்றால், கடந்த காலத்தில் நடந்த செயல்களிலிருந்து நாம் தீவிரமான பாடங்களைக் கற்றுக்கொண்டோம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த காலகட்டத்தில் நாட்டை மூடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க அனைத்து விடயங்களும், அமைதியாகவும் பொறுப்புடனும் கையாளப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்துவது முக்கியம் என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.