தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் அறையில் தங்க வைத்திருந்த, பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
15 வயதான பாடசாலை மாணவனே கண்டி- உடுநுவர சிறுவர் தடுப்பு மத்திய நிலையத்தில், கம்பளை நீதவான் மற்றும் மாவட்ட நீதவான் சினித் விஜசேகரவின் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கம்பளை நகரிலுள்ள பிரபல்யமான பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், மற்றுமொரு மகளிர் பாடசாலையில் 10 ஆவது படிக்கும் மாணவியை இவ்வாறு அழைத்துச் சென்று, இரண்டுநாட்கள் ஹோட்டலொன்றின் அறையில் தங்கவைத்துள்ளார்.
அவ்விருவரும் கடந்த 8 மாதங்களாக காதலர்களாக இருந்துள்ளனர். கடந்த 19ஆம் திகதியன்று மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி, இருவரும் நாவலப்பிட்டியவில் நீர்வீழ்ச்சியொன்றுக்குச் சென்று மாலைவரையிலும் நேரத்தை கழித்துள்ளனர்.
அதன்பின்னர், அவ்விருவரும் நுவரெலியாவுக்குச் சென்றுள்ளனர். ஒன்லைன் ஊடாக கற்பதற்கு பெற்றோர் வாங்கி கொடுத்திருந்த கையடக்க தொலைபேசியை 7 ஆயிரம் ரூபாவுக்கு விற்றே, மாணவன் இந்த பயணத்துக்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார்.
ஹோட்டல்களில் சிறுவர்களுக்கு அறைகள் கிடைக்காது என்பதை அறிந்து, தன்னுடைய மூத்த அண்ணாவின் தேடிய அடையாள அட்டையை அம்மாணவன் களவெடுத்துச் சென்று, ஹோட்டலில் அறையை பெற்றுள்ளார்.
அவ்வாறு அவ்விருவரும் ஹோட்டல் அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், மேலதிக வகுப்புக்குச் சென்றிருந்த தன்னுடைய மகளை காணவில்லையென, கம்பளை பொலிஸார் நிலையத்தில் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பில், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் மாணவி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மேற்படி விபரங்கள் அம்பலமானது.
15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து அச்சிறுவன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறுவர் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனைக்காக சிறுமி, கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.