ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமே களமிறங்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றாக இணைந்து கூட்டாக செயற்படப் போவதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எத்தகைய இணைப்பும் கிடையாது என்றும் அதற்கான வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்த தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.