பணி நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்கும் யோசனை தொடர்பான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்கும் யோசனையொன்றை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 115 பேரின் கையப்பத்துடன் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசபந்து தென்னக்கோனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறிருக்க, பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனின் பதவி சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, அவரை பதவி நீக்குமாறு கோரி சபாநாயகரிடம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை கையளித்திருந்தனர்.
இத்தகைய நிலையிலேயே பணி நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்கும் யோசனை தொடர்பான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.