ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) இடம்பெறவுள்ளது.
ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததாகவும், அதன்படி 40 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், எழுந்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
இதனிடையே, வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தேர்தல் செயலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக சுமார் 1000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.