கொழும்பு பல்கலைக்கழக மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி, தமது காதலி வேறு ஒருவருக்குச் சொந்தமாகிவிடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் கூறியதை அவர் ஏற்க விரும்பவில்லை எனவும், அதன் காரணமாக வேறு வழியின்றி அவரை கொலை செய்ததாகவும் சந்தேகநபரான இளைஞர் மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சந்தேக நபரான இளைஞர் இந்த கொலையை நன்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7 குதிரை பந்தய திடல் மைதானத்திலிருந்து நேற்று பிற்பகல், கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
ஹோமாகம – கிரிவத்துடுவ – புபுது உயன பிரதேசத்தில் வசித்து சத்துரி ஹங்சிகா என்ற 24 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளவரென அடையாளம் காணப்பட்டார்.
யுவதியின் கழுத்தை அறுத்த கத்தியை கடையொன்றில் இருந்து கொள்வனவு செய்த சந்தேகநபரான இளைஞர், தமது பையில் கத்தியை வைத்துக்கொண்டு நேற்று மதியம் 12.30 அளவில் குதிரை பந்தய மைதானத்துக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு தமது காதலி எனக்கூறப்படும் யுவதியை சந்தித்த அவர், முன்னரை போன்று எதிர்காலத்திலும் தமது உறவை பேண வேண்டுமென தெரிவித்துள்ள நிலையில், அதற்கு யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது அச்சத்தில் இந்த கொலையை செய்ததாக சந்தேகநபரான இளைஞர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொலைச் சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞர், பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இளைஞர் வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களில் தனியார் வகுப்பு ஆசிரியராக பிரபலமானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த இருவருக்கும் இடையே சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பல்கலைக்கழக நண்பர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சந்தேகநபரான காதலனும் அதே பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்று வருவதாக தெரியவந்துள்ளது.