இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சன்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
எஸ். ஜெய்சங்கருடன் வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர்.
இந்த குழுவினர் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி ரணில் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வருவதற்கு முன்னர் மாலைதீவிற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட்ட நிலையலேயே வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கு வருகைதந்துள்ளார்.
மேலும் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டைய நாடுகளான இலங்கை மற்றும் மாலைத்தீவுடன் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.