இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, வடக்கு மாகாணத்தின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழு, யாழ்ப்பாணம், மன்னார் நகரங்களை கேந்திரமாக கொண்டு கடந்த 16, 17,18 ஆம் திகதிகளில் பயணங்களை மேற்கொண்டது.
பல்வேறு தரப்பினர் முன்வைத்த விடயங்கள், பிரச்சினைகள் மற்றும் ஆணைக்குழு கண்காணித்தவை, அதன் பரிந்துரைகளை உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஆணைக்குழுவின் ஆணையாளர் அனுஷியா சண்முகநாதன் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வடக்கு மாகாணத்திற்கு சென்று மனித உரிமை தொடர்பான நிலவரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினர்.
பொலிஸார் உட்பட அரச அதிகாரிகள், சமய தலைவர்கள்,மாகாணத்தின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.