வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்து மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே சில மாகாண ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் நேற்றையதினம் வடமாகாண ஆளுநர், மேல் மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று முன்தினம் அனுப்பி வைத்ததாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அதேபோன்று நேற்றையதினம் மேல் மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதையடுத்து நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் என பல உயர் பதவிகளில் உள்ளோர் தமது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.
அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் உட்பட அனைத்து மாகாணங்களினதும் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அகமட், ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, மேல் மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலக, வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரே தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் இராஜினாமா தொடர்பில் நேற்று அரசாங்க வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.