நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 11 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டானை, கதிரான பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தலுகான – மஹியங்கனை வீதியில் பந்தனாகல சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், அவிசாவளை – ஹட்டன் வீதியில் தெஹியோவிட்ட அல்கொட வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நாரம்மல – குளியாபிட்டிய வீதியில் ஹொரொம்பாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 69 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், காலி – மாத்தறை பிரதான வீதியின் யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பிங்கிரிய – தும்மலசூரிய வீதியில் கந்துருவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
அத்துடன், தெஹியத்தகண்டி – மஹியங்கனை வீதியில் நாகஸ்வெவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் மொல்லிப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.