நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.
ஏற்கனவே கேப்ரியல் புயலால் நியூசிலாந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி – சிரியா நிலநடுக்கம்
துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் என அனைத்தும் தரைமட்டமாகின.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக உயிர் இழந்துள்ளனர். இந்த இரு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உலகமே துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என அச்சம் ஏற்படுகிறது.