ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலி இறந்த செய்தியைக் கேட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்தியாவின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால், இதற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்தியா செய்வதறியாது தவித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா தன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தியை கேட்ட சந்தியாவின் காதலனான கதிர்வேல் மன வேதனையில் நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் பொலிஸார் காதல் ஜோடியான இருவரின் சடலங்களையும் கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு மரணத்தில் ஒன்று சேர்ந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.