ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒலிடி புஷ்பா (வயது 22). இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான்.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை புஷ்பா விவாகரத்து பெற்றார். பின்னர், சவரம் கிராமத்தில் குழந்தை தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்தார்.
இதனிடையே, வேலைதேடி கடந்த ஆண்டு புஷ்பா விஜயவாடா சென்றார். அங்கு ஷேக் ஷமி (வயது 22) என்ற இளைஞருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் காதலித்துள்ளனர். பின்னர், புஷ்பாவும் அவரது காதலன் ஷேக் ஷமியும் சவரம் கிராமத்திற்கு அருகே உள்ள ரசோலி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் முறையில் கணவன் மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
புஷ்பாவின் லிவ் இன் முறை குறித்து அறிந்த தாயாரும், சகோதரனும் ஷேக் ஷமியை ஏற்றுக்கொண்டுள்ளனர். பின்னர், 4 பேரும் ரசோலி பகுதியில் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.
அதேவேளை, மதுபோதைக்கு அடிமையான ஷேக் ஷமி கடந்த சில மாதங்களாக புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி ஷேக் ஷமி வற்புறுத்தியுள்ளார். இதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு மதுபோதையில் வந்த ஷேக் ஷமி தனது லிவ் இன் காதலி புஷ்பாவிடம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு புஷ்பா மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ஷேக் ஷமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த புஷ்பாவின் தாயாரும், சகோதரனும் ஷேக் ஷமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஷேக் ஷமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து புஷ்பாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தடுக்க முயன்ற புஷ்பாவின் தாயாரையும், சகோதரனையும் ஷேக் ஷமி கத்தியால் குத்தியுள்ளார். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த புஷ்பாவின் தாயார், சகோதரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார், லிவ் இன் காதலன் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஷேக் ஷமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த லிவ் இன் காதலியை கார் மெக்கானிக் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.