திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொட்டிகாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் முருகம்மாள் (24). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.
தாராபுரம் அடுத்த சந்திரபுரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணக்கெடுக்கும் வேலை செய்து வருகிறார். சிதம்பரமும், முருகம்மாளும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாராபுரம் பகுதியில் உள்ள சத்திரம் திண்ணபுரி அம்மன் கோவிலில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர தாராபுரம் காவல் நிலையத்தில் இரு வீட்டாரும் புகார் அளித்தனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்தில் முறைப்படி திருமணம் செய்துகொள்வதாக சிதம்பரம் எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் சிதம்பரத்தின் குடும்பத்தினர் உறவுக்கார பெண்ணுடன் வரும் 8ம் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து முருகம்மாள் சிதம்பரத்திடம் கேட்டபோது, அவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், தனக்கு உறவு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகம்மாள் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முருகம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது குடும்பத்துடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.