முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இச்சூழலில் கடந்த மே மாதம் அவரின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், “சிறைகளில் பரவி வரும் கொரோனா தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது.
ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது.
இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ஆம் திகதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாம் என 7ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.
அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து கடந்த மே 28ஆம் திகதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.
இச்சூழலில் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுடன் பேரறிவாளனுக்கு பரோல் முடியவிருந்தது.
இந்நிலையில் 5ஆவது முறையாக பேரறிவாளனுக்கு பரோலை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அக்டோபர் 26ஆம் திகதி வரை பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மரகதம் மருத்துவமனையில் சிறுநீரக தொற்று பிரச்சினைக்காக பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.