இந்தியாவில் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது இந்தியா மார்ட் நிறுவனம்.
ஒவ்வொரு மாதம் முடியும் போதும் மாத கடைசியில் பணம் இல்லை என்பது நிறையப் பேரின் புலம்பலாக இருக்கும். எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினால் மாதத்தின் கடைசி வாரத்தை ஓட்டுவது பலருக்கு பெரும் சிரமமாக இருக்கும்.
எப்போது மாதம் பிறக்கும், எப்போது சம்பளம் வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். மாத இறுதி நாட்களை சமாளிப்பதற்காக கடன் வாங்குபவர்களும் உண்டு.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது. இனி மாதம் எப்போது பிறக்கும் என்று காத்திருக்கவே தேவையில்லை. இனி வாரச் சம்பளம்தான். இந்த சம்பள முறையை இந்தியா மார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்த ஊழியர்கள் போன்றோருக்கு மாத சம்பளம், தினசரி சம்பளம் இருந்தாலும், மிகப் பெரிய நிறுவனத்தில் வார சம்பள முறையை அமல்படுத்துவது இதுவே முதல் முறை.
ஒவ்வொரு வாரத்திலும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கான காசோலை வழங்கப்படும் என்று இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ”இது ஊழியர்களுக்கு வெகுவாகப் பயனளிக்கும். இதை வைத்து ஊழியர்கள் தங்களது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு, சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் நிலையில், இந்தியா மார்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களும் ஒவ்வொன்றாக இதைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.