இந்தியாவில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைகவசம் (ஹெல்மெட்) அணியாததால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மேட் அணியாமல் வாகன ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இதில் தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டையும் இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் அணிவதற்கு ஏற்றாற்போல் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரி்க்கும்படி உற்பத்தி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனங்களை 40 கி.மீக்கு மேல் இயக்கக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
இதுதொடர்பாக 2021 அக்டோபர் மாதம் மக்களின் கருத்தை கேட்க ஒரு வரைவு அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.