விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் ராசாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சந்தோஷ் – சுரேகா தம்பதி வாடகைக்கு வசித்து வந்தனர். சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சந்தோஷ் அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டியதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று மதுபோதையில் வந்த சந்தோஷ், நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ள மனைவி சுரேகாவிடம் சண்டை போட்டுள்ளார்.
தெருவில் நின்றுக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அடிக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுரேகா காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியால் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவர் சந்தோஷ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு நேரில் சென்ற சுரேகா நடந்ததை கூறி சரணடைந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குடிபோதையில் தகராறு செய்த நபரை கர்ப்பிணி மனைவி கொலை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.