தேர்வு சமயத்தில் மாணவி ஒருவர் காப்பி அடித்ததாக குற்றஞ்சாட்டி அவரது உடைகளை ஆசிரியர் களைந்து பார்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் தொடர்ந்து சாதி ரீதியான பாகுபாட்டைக் காட்டி வந்ததாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவியின் உடைகளைக் களைந்து ஆசிரியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக அப்பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த செப். 23ஆம் திகதி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாகத் தேர்வு ஒன்று நடந்துள்ளது. அன்றைய தினம் அந்த மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், பரீட்சையின் நடுவில் இரண்டு முறை கழிவறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவி செல்போன் மூலம் காப்பி அடிக்கவே அடிக்கடி கழிவறையைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய அந்த ஆசிரியர், மாணவியையும் பள்ளியின் சுகாதார பணியாளர் ஒருவரையும் கழிப்பறைக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.
அங்கு அப்பெண்ணின் உடைகளைக் களைந்து சோதனையிட்டுள்ளார். முதலில் மேலாடையை அகற்றச் சொன்ன அந்த ஆசிரியர், பின் பேன்டையும் அகற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுக்கவே, கோபமடைந்த அந்த ஆசிரியர் தொடர்ந்து மாணவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் தனது தாயிடம் சொல்லி கண்ணீர் வடித்துள்ளார் அந்த மாணவி. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அப்பள்ளி நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர், அந்த குறிப்பிட்ட ஆசிரியர் தங்கள் மகளிடம் இப்படி நடந்து கொள்வது இது முதல்முறை இல்லை என்றும் ஏற்கனவே பல்வேறு சூழ்நிலைகளில் அந்த ஆசிரியர் தங்கள் மகளிடம் இப்படி நடந்து கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
தனது மகள் அணிந்திருக்கும் ஆடை உள்ளிட்டவை குறித்தும் கூட அந்த ஆசிரியர் முறையற்று பேசியுள்ளதாகவும் வகுப்பறைகளிலேயே சாதி ரீதியான பாகுபாட்டைக் காட்டுவதாகவும் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் அந்த ஆசிரியர் என் மகளை இப்படி பாகுபாட்டுடன் நடத்தியுள்ளார். கடந்த காலத்திலேயே இது குறித்து உரிய நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவங்கள் எனது மகளின் வாழ்க்கையில் எப்போதும் ஆறாத காயமாக இருக்குமோ என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.
இது குறித்து நான் கடந்த செப். 24ஆம் தேதி புகார் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது எனது மகள் பொய் சொல்வதாகவும் நான் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதாகவும் அலட்சியமாகப் பதில் கூறினார்.
அவர்களுக்குப் பள்ளியின் மீது எந்தவொரு அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியம். அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள்.. இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்துச் சம்பந்தப்பட்ட ஆசிரியரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்,
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் நடந்தது கழிப்பறையில் என்பதால் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்துக் கொண்டு விசாரித்தால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த சம்பவம் குறித்து பள்ளியின் சார்பில் கூறுகையில், “அந்த மாணவி மிகவும் நல்ல மாணவி, கடந்த 10 ஆண்டுகளாகவே இங்கு தான் படித்து வருகிறார். அன்றைத் தினம் வழக்கமான சோதனை தான் நடந்தது. இவர்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை.
மேலும், அந்த மாணவியைக் குறிப்பிட்ட ஆசிரியரே கடந்த காலங்களில் பாராட்டியுள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள் எல்லாம் எங்கள் பள்ளியில் எதுவும் இல்லை.
மேலும், இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் செப். 23க்கு பின்னர் நடந்த தேர்வுகளிலும் அந்த மாணவி பரீட்சை எழுதினார். அப்போது அந்த மாணவி மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்” என்று தெரிவித்தார்.
இருப்பினும், இது குறித்து அந்த மாணவியின் தாய் கூறுகையில், “இந்த சம்பவத்திற்குப் பின்னர், அவள் பள்ளி செல்ல மறுத்ததால் நான் தான் வலியுறுத்தி அனுப்பி வைத்தேன். அவர்கள் இதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போலக் காட்டிக்கொள்ள அனைத்து பொய்களையும் கூறி வருகின்றனர்” என்றார்.
ஏற்கனவே கொரோனாவால் கடும் அழுத்தத்தில் மாணவிகள் உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.