குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததுடன், பி.ஜே. மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியுள்ளது. கட்டிடத்திற்குள் நுழைந்த விமானத்தின் வால் பகுதி மட்டுமே வெளியே தெரியும்படி காணப்பட்டது.
மதியம் நேரம் என்பதால் தங்கும் விடுதிக்கு மதிய உணவு அருந்த பயிற்சி டாக்டர்கள் வந்துள்ளனர். இதனால் பலர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களை தவிர குடியிருப்பு மற்றும் ஹாஸ்டலில் உள்ளவர்களும் உயிரிழந்துள்ளதாக வந்துள்ள செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.