புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுத் திரும்பிய போது கரூர் மாவட்டம் மாயனூர் ஆற்றில் இறங்கினர். அப்போது நீரில் மூழ்கிய 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர், அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரால் திருச்சி மாவட்டம், ஏழுர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். போட்டிகள் முடிவடைந்தபின் கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள கதவணையை சுற்றி பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.
அங்கிருந்த செல்லாண்டி அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு குளிப்பதற்காக சில மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகள் ஆழத்திற்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அங்கிருந்த மற்ற மாணவிகள் அவர்களை காப்பாற்ற முயன்றும் பலனில்லை.
மாணவிகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த உள்ளூர் இளைஞர்களும் ஆற்றில் குதித்து நீரில் முழுகிய மாணவிகளைத் தேடிப்பார்த்தனர். இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்ட அங்கு வந்த மாயனூர் போலீஸார் உடனடியாக கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்து தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர்.
அவர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரம் ஆற்றுக்குள் தேடிய நிலையில் அடுத்தடுத்து மாணவிகள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மாயனூர் போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.