கோவை மாவட்டம் வால்பாறையில் சத்துணவு கூடத்தில் சிக்கிய காட்டு யானை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது ஹை பாரஸ்ட் தேயிலை தோட்டம். இங்கு ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகின்றது.
இங்கு பயிலும் மாணவர்களுக்காக சத்துணவு வழங்குவதற்காக பள்ளியை ஒட்டி சத்துணவு கூடம் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி திறக்கப்படாத நிலையில் சத்துணவு கூடமும் பூட்டிக்கிடந்தது.
இது கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதி என்பதன் காரணமாக காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நகராட்சி ஊழியர்கள் இப்பள்ளியில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகளுக்காக பார்வையிட்டனர்.
அப்போது சத்துணவு கூடத்தில் இருந்த பகுதிக்குள் சுவர் இடிக்கப்பட்டு கிடந்தது. நகராட்சி ஊழியர்கள் உள்ளே எட்டிப் பார்த்தபோது யானையின் எலும்பும் தோலும் கிடப்பது கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் செல்வம் வனத்துறை மருத்துவர் சுகுமார் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீதமுள்ள பாகங்கள் எரியூட்டப்பட்டது .முதல் கட்ட விசாரணையில் உணவுக்காக சுவற்றை இடித்து உள்ளே சென்ற யானை வெளியே வர இயலாமல் சிக்கிக்கொண்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், இறந்தது இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்றும் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.