ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டறியப்பட்டார்.
அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக ரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், சிறுமியின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளது. நேற்று மூன்று மணிநேரத்திற்கும் மேல் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் சீரான நிலையில் இருக்கிறார். குழாய் மூலம் உணவு வழங்கி வருகிறோம் என கூறினர்.
இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அரசு தன்னுடைய தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாது.
அரசாங்கம் தூங்குகிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ லால் சர்மா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த ராஜஸ்தான் அமைச்சர் பர்சாடி லால் மீனா கூறுகையில், சிறுமிக்கு சிகிச்சை அளித்ததில் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்.
குற்றவாளிகளை உடனே கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என கூறினார்.
நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.