- Advertisement -
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம், முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர், இன்று (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பாலம், முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, உயிரிழந்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவ தினமான நேற்றிரவு (18) வீட்டுக்கு அருகாமையிலுள்ள தோட்டத்துக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பியோடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும் இன்று காலை அங்கிருந்து வெளியேறியதாகவும் கைதுசெய்யப்பட்ட நண்பன், பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று காலை நண்பனின் வீட்டுக்குச் சென்று, நண்பனை அடித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்து, வீட்டாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தையும் காண்பித்ததாக, கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு, தீவிர விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கரடியனாறு பொலிஸார், சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.