திருப்பூரை அடுத்த புதுநகர் ஒத்தக்கடை பகுதியில் நேற்று சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக் காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? பலாத்காரம் செய்யப்பட்டிருப்பாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து திருப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில், சூட்கேசில் சடலமாக இருந்த பெண்ணின் காலில் மெட்டி இருந்ததால் அவர் திருமணமான பெண்ணாக இருக்கலாம். மேலும், சூட்கேஸ் இருந்த சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. வேறெங்கோ தொலைவில் நடந்துள்ளது.
அந்த பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா இல்லை அண்டை மாநிலமா என்பதுகூட தெரியவில்லை. பலாத்காரம் செய்யப்பட்டதான காயங்கள் உடலில் இல்லை என்றாலும் சடலத்துக்கு உரிமைகோர உறவினர்கள் வந்த பிறகே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொலை எப்படி நடந்தது என்பது தெரிய வரும் என தனிப்படை போலீசாரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்து சூட்கேஸை வீசி செல்லும் நபர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும், அதை வைத்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.