கம்பளையில் தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயதுக் குழந்தை, தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புரஸ்ஸ டெல்டா தோட்டத்தின் வடக்கு பகுதியிலே தாய் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஸ்வர்ணா என்ற இந்த தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வானொலியை சத்தமாக ஒலிக்க செய்துவிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
நீண்ட நேரமாக சிறு குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அயலவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, குழந்தை பெண்ணின் கால்களை பிடித்துக்கொண்டு அழுவதையும் கண்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சோதனையிட்ட போது, தாய் குழந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. “தங்கம் நீ கவனமாக இரு… நான் செல்கிறேன்… இப்படிக்கு மம்மா” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த பெண்ணின் கணவர் தோட்டத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.