நாவற்குழியில் தாயையும் மகனையும் தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கடந்த வருடம் தெல்லிப்பழையில் வீடொன்றில் 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு வசித்த தாயையும் மகனையும் கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கி நகைகளைத் தருமாறு துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் 5 ஆயிரம் ரூபா பணத்தினையும் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியினையும் கொள்ளையிட்டுத் தப்பித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேக நபர்கள் பற்றிய தகவல் கிடைத்தது.
23 மற்றும் 26 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரையும் நாவற்குழியில் வைத்து கைது செய்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், அவர்களை சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் முற்படுத்தினர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.