உலகம் முழுவதிலும், ஆங்கிலக் கேலண்டரின் படி, ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதே போல, இலங்கை, தமிழ்நாடு மற்றும் தமிழ் சமூகங்கள் வசிக்கும் இடங்களில், சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும். 2025 தமிழ் புத்தாண்டு அதாவது தமிழ் வருட பிறப்பு ஏப்ரல் 14, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
சித்திரைத் திருநாள், தமிழ் வருட பிறப்பு, என்று பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு அன்றுதான் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு மொழிகள் பேசுபவர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. நடப்பு ஆண்டின் பெயர் குரோதி என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தமிழ் புத்தாண்டின் பெயர் விசுவாவசு என்று அழைக்கப்படுகிறது. 60 ஆண்டுகளில் இந்த ஆண்டு 39வது ஆண்டாகும்.
பாரம்பரிய முறைப்படி தமிழ் வருட பிறப்பன்று, பொங்கல் பண்டிகைக்கு போல வீட்டை சுத்தம் செய்து, அலங்காரம் செய்வது போல செய்ய வேண்டும். வாசலில் பெரிய கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, வீட்டில் இருக்கும் அனைவரும் தலைக்கு குளித்து, அறுசுவை உணவு சமைத்து, பூஜை செய்து உண்பார்கள்.
கோடை வெயில் அதிகரிப்பதை ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் குறிப்பிடுவதால், தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவை உணவுகளோடு நீர் மோர் மற்றும் பானகம் ஆகிய இரண்டும் செய்து பூஜையில் வைத்து அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும்.
தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுவதால், புதிய பஞ்சாங்கம் வாங்கி பூஜையில் வைத்து உணவு இனிப்புகள் சமைத்து கற்பூரம் காட்டி அனைவரும் வணங்கிய பின்பு பஞ்சாங்கம் படிப்பது என்பது பாரம்பரிய பழக்கமாக இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
வீட்டில் சுப காரியம் நடத்துவதற்கு, சுபகாரிய பேச்சை துவங்குவதற்கு பஞ்சாங்கத்தில் நல்ல நாள் மற்றும் நேரம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கமாகும்.
ஆங்கில நாட்காட்டியை போல அல்லாமல் சூரியன் மற்றும் சந்திரனின் பெயர்ச்சியில் அடிப்படையில், மாதப்பிறப்பு, ஆண்டு பிறப்பு, திதிகள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் நாள், ஒரு மாத பிறப்பை குறிக்கும். அந்த வகையில் ஜாதக கட்டத்தில் உள்ள 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் சித்திரை மாத பிறப்பையும், தமிழ் வருட பிறப்பையும் குறிக்கும். ஏப்ரல் 14 2025 அன்று சூரியன், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
விசுவாவசு புதுவருடம் பிறப்பு
வாக்கிய பஞ்சாங்கம்:
ஏப்ரல் 14 – அதிகாலை 2.29
திருக்கணித பஞ்சாங்கம்:
ஏப்ரல் 14 – அதிகாலை 3.21
விஷு புண்ணியகாலம்
13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.
ஆடை நிறம்
சிவப்பு, வௌ்ளை
கை விஷேடம் பரிமாறும் நேரம்
திருக்கணித பஞ்சாங்கம்
- 14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.05 முதல் 07.10 மணி வரை
- காலை 09.05 முதல் 09.55 வரை
வாக்கிய பஞ்சாங்கம்
- 14 திங்கட்கிழமை பகல் 09 .09 முதல் 09.56 வரை
- பகல் 9.59 இல் இருந்து 10.31 வரை
- பிற்பகல் 4.06 இல் இருந்து 5 மணி வரை
தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.