இன்றைய நாட்களில் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்தல், ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்தல், ஆன்லைனில் கற்பித்தல் போன்ற பல வேலைகள் ஆன்லைனில் செய்யப்படுகின்றன.
ஆனால் ஹரியானா மாநிலம் கர்னாலில் ஆன்லைன் திருமணம் நடந்தது, அந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் செய்தியாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர் அமித். இவருக்கும் கர்னால் பகுதியைச் சேர்ந்த அஷு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 19ஆம் தேதி ஹரியானா மாநிலம் சோனிபட்டில் திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் அமித்தும், அஷுவும் அமெரிக்காவில் தனித்தனி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அமித் 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் வணிகக் கடற்படையில் சேர்ந்தார்.
பின்னர் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அவர், கடந்த 2017 முதல் ஒரு கண்காணிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அஷுவிற்கு அமெரிக்காவில் ஒரு தனி நிறுவனம் உள்ளது.
இவர்கள் இருவரும் அமெரிக்காவிலேயே சந்தித்து, காதல் வயப்பட்டனர். பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, இரு வீட்டாரிடமும் தெரிவித்தனர்.
வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர், மணமக்களுடன் இரு வீட்டாரும் இணையம் வழியாகவே பழகி திருமணத்தை நிச்சயம் செய்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த ஜோடியால் இந்தியாவிற்கு வர முடியவில்லை.
திருமண ஜோடி அமெரிக்காவில் இருந்ததால் மணமக்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த திருமணம், ஹரியானாவின் பாரம்பரியத்தின்படி நடைபெற்றது. மணமகன் வீட்டார் சோனிபட்டில் இருந்து கர்னால் வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். மணமகள் வீட்டார் கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
மணமகனின் உறவினர்கள் சோனிபட்டில் உள்ள தனியார் விருந்து மண்டபத்தில் திகா மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மணமகள் வீட்டார் அங்கு சென்று திகா மரபை முடித்திருந்தனர்.
மேலும் மணப்பெண்ணின் உறவினர்கள் சிலர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், புரோகிதர்களின் ஆலோசனைப்படி ஹரிசின சாஸ்திரம், சப்தபதி துளினிங்கா உள்ளிட்ட பல திருமண சடங்குகளை அவர்கள் மூலமாகவே செய்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
திருமண ஜோடி அமெரிக்காவில் இருந்ததால், திருமணத்தை இணையத்தில் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய டிவி ஸ்கிரீன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் இருவரும் டிவி திரை மூலமாகவே பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
திருமண சடங்குகள் மணமக்கள் இல்லாமலேயே இந்தியாவில் நடைபெற்றது. திருமண ஜோடியும் ஆன்லைன் மூலமாகவே திருமணத்தில் பங்கேற்று சடங்குகளை செய்த நிகழ்வு இணையதளத்தில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.