பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று(23) கலந்துரையாடவுள்ளனர்.
கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன கேள்வி பத்திரம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், இன்று பிற்பகல் வரை இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிற்பகல் 4.30 மணியளவில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையேயான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
கெரவலப்பிட்டி சுகதநவ் நிலையத்தில் திரவ இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் கேள்விபத்திரமின்றி அமெரிக்காவின் நிவ் போர்ட்ரெஸ் எனர்ஜி (New Fortress Energy) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் தற்போது கருத்தாடல்கள் வலுப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் ஆளும் கட்சியினது பங்காளிகட்சிகளின் தலைவர் கடந்த திங்கட்கிழமை கமினியூஸ்ட் கட்சியின் தலைவரின் காரியாலயத்தில் ஒன்று கூடி கலந்துரையாடல் நடத்தினர்.
இதுதவிர, ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் பிரதிநிதகள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறசேனவுக்கிடையே நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவுப்படுத்த குறித்த கலந்துரையாடலில் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.