இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஓபனருக்கான இடம்தான்.
இரண்டாவது போட்டிக்கான லெவன் அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஓபனராக இல்லாமல் மிடில் வரிசையில் களமிறக்கப்பட்டார். மேலும், ரிஷப் பந்த் ஓபனராக களமிறங்கியதால், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரிஷப் பந்தின் இடத்தை மாற்றிவிட்டு, ராகுல் மிடில் வரிசையில் களமிறக்கப்பட்டதால், இனி வரும் போட்டிகளில் ராகுல் மிடில் வரிசையில்தான் களமிறங்குவார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
ஆனால், ரிஷப் பந்த் தொடர்ந்து ஓபனராக களமிறங்க மாட்டார் என்பதும் ரோஹித்தின் பேட்டியில் உறுதியானது. இரண்டாவது போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித், “புதுமையாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று எண்ணியதால்தான், ரிஷப் ஓபனராக களமிறக்கினோம் இது நிரந்தரம் அல்ல.
அடுத்த போட்டியில் நிச்சயம் ஷிகர் தவன் களமிறங்குவார்” எனத் தெரிவித்தார். இதனால், ரிஷப் பந்த் அடுத்த போட்டியின்போது பெஞ்சில் அமர்வது உறுதியாகிவிட்டது.
ரிஷப் பந்த், தொடர்ந்து போட்டியின் சூழ்நிலை தெரியாமல், எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதும் தெரியாமல் விளையாடி படுமட்டமான ஷாட்களை அடித்து நடையைக் கட்டி வருகிறார்.
இதனால்தான், அவரை இனி டி20 அணிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, அந்த இடத்தை ராகுலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மற்றபடி, நாளைய போட்டிக்கான இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
இந்திய உத்தேச அணி: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யுஜ்வேந்திர சஹல்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.