நுவரெலியா – ராகலை பகுதியில் தனி வீடொன்று தீப்பற்றி எரிந்தமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். அச்சம்பவத்தை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீயில் கருகி மரணமடைந்த தங்கையா என்பவரின் மகனான இரவீந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குணதாச நேற்று முன்தினம் (12) மாலை உத்தரவிட்டுள்ளார்.
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு, கடந்த 7 ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகினர்.
இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, துவாரகன் (வயது13), மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு நாள்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ள.
அதனையடுத்தே, மகனான தங்கையா இரவீந்திரன் கைது செய்யப்பட்டார். சம்பவ தினத்தன்று தங்கையாவின் மகன் இரவீந்திரன் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் கொள்வனவு செய்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.