நள்ளிரவில் மனைவி காரில் இருந்து இறங்கியது தெரியாமல், காரை எடுத்துக்கொண்டு வீடு சென்ற கணவன் தொடர்பான தகவல் வைராலாகி வருகின்றது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதி பூண்டோம் சாய்மூன் – அம்னுவாய் சாய்மூன். இவர்கள் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் காரின் பின் இருக்கையில் மனைவி அம்னுவாய் இருக்க காரை பூண்டோம் சாய்மூன் ஓட்டிச்சென்றுள்ளார்.
இரவு நேர பயணம் என்பதால் மனைவி பின் இருக்கையில் அமர்ந்து தூங்கியிருக்க்கிறார். அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சாலை ஓரத்தில் காரை பூண்டோம் நிறுத்தியிருக்கிறார்.
கார் நின்றதால் விழித்த மனைவி அம்னுவாய் சாய்மூன், தானும் இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கியிருக்கிறார்.
மனைவி இறங்கியது தெரியாததால் பூண்டோம் சிறு நீர் கழித்து விட்டு தனது காரை எடுத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டாராம்.
ஆனால், ஆள் அரவற்ற காட்டுப்பகுதியில் சிக்கிக் கொண்ட மனைவி அம்னுவாய் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து இருக்கிறார். ஒரு வழியாய் நடந்து சென்று யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று அங்கிருந்து நடந்தே கிளம்பியிருக்கிறார்.
சுமார் 19 கி.மீட்டர் நடந்து வந்த அம்னுவாய் அங்குள்ள கபின் புரி என்ற பகுதிக்கு வந்து இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக இவரது கண்ணுக்கு அங்கே ஒரு போலீஸ்காரர் தென்பட்டார். அந்த போலிசிடம் நடந்த விவரத்தையும் சொல்லி இருக்கிறார். தனது போனும் காரில் இருப்பதால் தன்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கணவனது செல்போன் எண்ணும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு வீட்டு எண் தெரிந்ததால் வீட்டில் உள்ள தொலைபேசியின் எண்ணுக்கு போலீசார் அழைப்பு விடுத்து இருக்கிறார். கிட்டதட்ட 20 முறைக்கும் மேல் போன் செய்து காலை 8 மணி அளவில் தான் கணவரை தொடர்பு கொள்ள முடிந்து இருக்கிறது.
கோரட் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு அதாவது 100 மைல் தொலைவு சென்ற அவர் மீண்டும் மனைவியை அழைத்துச்செல்ல வந்து இருக்கிறார். சினிமா காமெடி காட்சிகளை போன்று போலீசார் விசாரித்ததில், மனைவி பின் இருக்கையில் தூங்கிக் கொண்டு இருப்பதாக நினைத்து சென்று விட்டேன் என்று சொல்லி, மனைவியிடமும் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்டு அவரது மனைவியும் கணவருடன் புறப்பட்டு சென்று இருக்கிறார். சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை போன்று நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.