கனடாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ ஏற்படும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கிழக்குக் கடற்கரையின் நோவா ஸ்கோடியா வரை 249 இடங்களில் கட்டுக்கடங்காத தீப்பற்றி எரிந்து வருகிறது.
சுமார் 1 கோடி ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளதால், கடும் புகை மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள கியூபெக் மிக மோசமான தீ பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் வரை காட்டுத் தீ நீடிக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா காட்டுத்தீயால் உருவான கடும் புகையும் காற்று மாசும் தென் பகுதியில் நகர்ந்து, அமெரிக்க மாகாணங்களை மூச்சு முட்ட வைத்துள்ளது.
ஒட்டாவா நகரில் இருந்து சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வரை தெற்கு பகுதியில் பரவி, அமெரிக்காவின் 18 மாகாணங்களைச் சேர்ந்த, சுமார் 1.25 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, கிழக்கு அமெரிக்காவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, நியூயார்க் நகரின் வானம் மஞ்சள் நிறத்தில் தென்படும் அளவுக்கு காற்று மாசு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நியூயார்க்கில் இருந்து குறைந்த விமானங்களே இயக்கப்படுகின்றன.
இது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹொச்சூல் தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் இலவச முகக்கவசம் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.