யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் 02 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட கடற்படையினர், முதலில் 13 மீனவர்களுடன் ஒரு படகை கைப்பற்றியுள்ளனர்.
அதன்பின்னர் 09 மீனவர்களுடன் மற்றுமொரு இந்திய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 22 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 72 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் 10 படகுகளும் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 72 இந்திய மீனவர்களில் 21 பேர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, கடந்த 21 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
அதற்கமைய, 51 இந்திய மீனவர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.