கிழக்கு மாகாணத்தில் இதுவரை 98 சதவீதமாக அதிபர்களும் ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். எனினும், தடுப்பூசி போடாத எந்த ஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழைய முடியாது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப வகுப்புகளைக் கொண்ட 588 பாடசாலைகள் மாத்திரதே, எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை எனவும் மாறாக மாகாணத்திலுள்ள வகை 3ஐச் சேர்ந்த 346 பாடசாலைகளும், ஏனைய வகை 2 ,1சி, 1ஏபி வகை பாடசாலைகளில் 200 மாணவர்களுக்குகுறைவாக உள்ள ஆரம்ப பிரிவைக்கொண்ட 242 பாடசாலைகளுமே திறக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நாளை திங்கட்கிழமை (18) ஆரம்பமாகின்றன. கொவிட் 19 தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள், செய்திக் குறிப்புகள் அனைத்தும் மாகாணத்திலுள்ள சகல வலயங்களுக்கும் நாளை கையளிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை பகுதியளவில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.
“இவ்வாரம் பாடசாலைகளை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் அதாவது முதலிருவாரங்களில் சீருடை அவசியமில்லை. அதேவேளை, முழுமையான கற்பித்தல் நடைபெறமாட்டாது” என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.