குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வு: நிதி கிடைக்காமையால் தொடர்ந்தும் தாமதமடைகிறது

"உடல்களை மீட்பதற்கான நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதை அவதானித்த நீதவான், வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நவம்பர் 17, 2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் கூடி ஒரு தெளிவான தீர்மானத்தை எடுக்குமாறு உத்தரவிட்டார்."

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வு: நிதி கிடைக்காமையால் தொடர்ந்தும் தாமதமடைகிறது

தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நிதி தாமதத்தால் தொடர்ந்தும் தாமதமடைந்துள்ளது. 

35 வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வுப் பணியை ஆரம்பிக்க தேவையான 2.8 மில்லியன் ரூபாய் நிதிக்கான பாதீட்டை கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதிகாரி செப்டெம்பர் 23, 2025 அன்று களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அகழ்வாய்வுப் பணிகளைத் ஆரம்பிக்க நிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்க செய்ய நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக, குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி, களுவாஞ்சிகுடி நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனாருதீன் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

"உடல்களை மீட்பதற்கான நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதை அவதானித்த நீதவான், வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நவம்பர் 17, 2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் கூடி ஒரு தெளிவான தீர்மானத்தை எடுக்குமாறு உத்தரவிட்டார்."

அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்காக செப்டெம்பர் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது நீதி மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும் எனவும் உயர் நீதிமன்றம் 2025 ஒக்டோபர் 10 அன்று, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் ஸப்னா சிராஜ் ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் இந்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எலும்புக்கூடுகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படாமல், அகழ்வாய்வினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள, இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதலாவது மனித புதைகுழி இதுவாகும்.

2014 சுற்றுலா நீதிமன்றம்

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழுவை படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.