கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில்  9 வயது மகளை இழந்த குடும்பம்; புதிய வாழ்வின் கனவு சோகமாக மாறியது

புதிய நாட்டில் புதிய கல்வி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என குடும்பம் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், டிசம்பர் 5ஆம் திகதி இந்தத் துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில்  9 வயது மகளை இழந்த குடும்பம்; புதிய வாழ்வின் கனவு சோகமாக மாறியது

Canada நாட்டுக்கு அகதிகளாக வந்து ஒரே மாதமே ஆன நிலையில், தங்கள் அன்பு மகளை இழந்த ஒரு குடும்பத்தின் துயரமான சம்பவம் மனதை உலுக்கும் வகையில் பதிவாகியுள்ளது.

மியன்மார் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் இருந்து உயிர் தப்பி, பங்களாதேஷ் நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்த ஆயுப் கான் குடும்பம், பின்னர் கனடாவுக்கு குடியேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றது. 

இந்தக் குடும்பத்தை கனடாவுக்கு வர உதவியாக இருந்தவர், ஆயுப் கானின் சகோதரரான நாசிர் கான் ஆவார்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி கனடா வந்தடைந்த ஆயுப் கான் குடும்பம், தங்கள் 9 வயதான மகள் ஷோமிமாவை Surrey நகரில் உள்ள Newton Elementary School பாடசாலையில் சேர்த்திருந்தது. 

புதிய நாட்டில் புதிய கல்வி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என குடும்பம் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், டிசம்பர் 5ஆம் திகதி இந்தத் துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்று பாடசாலையில்  இருந்து வீடு திரும்பியபோது, தன் தந்தையுடன் வீதியைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்துடன் தொடர்புடைய வேன் சாரதி, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிருக்கு அச்சம் காரணமாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி, பல துன்பங்களை கடந்து கனடாவுக்கு வந்து ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இந்த அகதிகள் குடும்பம், இன்று தங்கள் மகளை இழந்து சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளது.